கவிஞர் இசையின் கவிதைகள் எனக்கு உலகியலின் பல சந்தர்பங்களை பகடியுடனும் அது அளிக்கும் தன்னம்பிக்கையுடனும் நோக்க உதவுபவை. வாழ்வை இலகுவாக எதிர்கொள்ளும் அவரது கவிதைகள் என்றும் எனக்கு அணுக்கமானது.
வாழ்வை நடத்தி செல்லும் போக்கில் பொருளியல் தேவை என்பது கட்டாயமாய் இருக்கிறது. எனக்கு பொருளியல் தேவைகள் என்பது கொசுத்தொல்லை போலத்தான். நாம் அதை பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் ஓர் எல்லைக்குமேல் நம்மால் சமாளிக்க முடியாது. எனவே பொருளியல் தேவை எனும் கொசுவை பொருட்படுத்தியே ஆக வேண்டும். சில சமயம் இந்த கொசு அடிக்கும் வேலையைகூட நாமே விரும்பி செய்வதாய், ரசனைக்குரியதாய் அமைத்துக் கொள்ளலாம். பங்குச் சந்தை வணிகம் எனக்கு அவ்வாறனதே.
ஆட்ட நாயகன்
புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து
நிம்மதியாக இருக்கிறேன்.
கொசு விரட்டிகள்
கொசுக்களை விரட்டி விடுகின்றன.
ஆனால்
மட்டை அவைகளை கொன்று தீர்க்கிறது.
ஒரு கொசு பறந்து போக
நானும் பறந்து போய்
சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…
இன்பம் என் உள்ளத்தில் ”பட்” என்று தெறிக்கிறது.
" பட்… பட்… பட்பட்பட்….”
இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி
ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து
"தயை”… "தயை”.. என்று கதறும்.
கதறலின் மண்டையில் ஓங்கி ஒரு போடு
எனது களம்...
எனது ஆட்டம்...
நானே நாயகன்
பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவது போலே
மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.
(ஆட்டுதி அமுதே! தொகுப்பிலிருந்து)

No comments:
Post a Comment