Saturday, April 7, 2018

ஐடியிலிருந்து பங்குச்சந்தைவரை - 3 (உறுதிமொழி)

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குமுன் நண்பன் மணவாளனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு பிரசுரிக்கிறேன். இன்று திரும்பி பார்க்கையில் இக்கடிதத்தில் அளித்த உறுதிமொழியை சற்று தாமதமாகவேனும் நிறைவேற்ற முடிந்திருப்பதை எண்ணி நிறைவு கொள்கிறேன்.



நாள்: 
2/13/15


ரேண்டம்நஸும் ஒழுங்கும்


....எப்போதுமே பலனளிக்கக் கூடியது.
//

இம்மாதம் ஆரம்பம் முதல் சற்று பராவயில்லை. மனம் ஈடுபடுவதற்கு தீவிரமான ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி ஏதும் சிக்கவில்லை என்றால் நிலமை பரிதாபம்தான். பங்கு சந்தையில் இம்மாதம் தீவிரமாக இருக்கிறேன். முன்பிருந்தே ஈடுபட்டு வருவதுதான். இருப்பினும் தற்போதுதான் பலன்தர ஆரம்பித்திருப்பதாக ஒரு உணர்வு. பணம் ஈட்ட வேண்டும் என்பது கூட அல்ல. அலுவலகத்தில் இருக்கும் போது ஏதோ ஒருவிதத்தில் ‘engaged’ஆக இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் தண்ணீர், டீ குடிப்பதற்கும், கழிவரைக்கும், தினசரி படிப்பதற்கும் ஒட வேண்டியிருக்கும்.


இம்மாதம் இரண்டு வாரத்தில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஈட்ட முடிந்தது பல கனவுகளை உசுப்பி விட்டுள்ளது. இவை தொடர் சாத்தியமா, நிலையானதா என்ற எந்த கேள்விக்கும் ஆம் என்றே சொல்லி வருகிறேன். ஒரு திட்டம் இருக்கிறது மணவாளன். இன்னும் ஆறு மாதத்திற்கு வேலையில் இருந்து கொண்டே பங்குசந்தை. அதில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க முடிந்தால் வேலையை விட்டுவிடுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடலாம். ’ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள்’.. இந்த வாசகமே என்னுள் ஓடிக் கொண்டிருக்கிறது.

நான் அவசரப்பட்டு இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது நடக்குமா என்ற சந்தேகம் இருக்கும் வரையில் இதை எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், இதை எழுதுவதற்கான காரணமும் இதுவே. அதாவது எனக்குள் வெகுநாளாக இப்படி ஒரு ஒப்பந்தம் உள்ளது. உண்மையானது, நடந்தது, நடக்க கூடியது மட்டுமே எழுத முடியும். ஒருவேளை எழுதிவிட்டால் அதை உண்மையாக்குவதற்காகவேனும் நான் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இப்போதும் பெரும் சந்தேகத்துடனும், பல கேள்விகளுடனும்தான் இதை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இது தற்போது வரையறுக்கப்பட்டுவிட்ட ஒரு எண்ணம். முன்பைவிட மேலானது. திடமானது.


சரி வீட்டில் என்னவென்று சொல்வது?, சரி கிட்டத்தட்ட சொல்லியது தான்.
முதலில் இதை ஒரு தொழிலாக பிறரிடம் முன்வைக்க முடியுமா? எனக்கே இதை ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்வதில் சந்தேகம் இருக்கிறது. சரி இதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு பகலில் என்னை செலுத்துவது இதுவே. எண்கள்! மந்திரம் போல நான் திரும்ப திரும்ப உச்சரிக்கும் எண்கள். என்னையே அறியாமல் பலமுறை நான் திரையில் காண விரும்பும் எண்ணை அகத்தில் தொடர்ந்து ஓடவிட்டு இருந்திருக்கிறேன். நான் தொடர்ந்து வலியுறுத்தினால் அந்த எண் திரையில் வந்துவிடும் என்பது போல. எண்கள்! கூடிக் குறைபவை, எந்த பக்கம் என யூகிக்க முடியாதபடி கொஞ்ச நேரம் நிலைத்திருந்துவிட்டு, ஒரு பக்கமாக நிதானமாக பயணிக்க ஆரம்பித்து பழிப்புக் காட்டிவிட்டு பின்பு சரேலென்று
எதிர்திசையில் பயனிப்பவை. ஒரே நேரத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்குமான வாய்ப்புகளும் தர்க்கங்களும் கொண்டவை.. கன நேரமும் எதிர்பாராத ஏதோவொன்றை நிகழ்த்தி சவாலுக்கு அழைப்பவை.

பங்கு சந்தை என்பது ஒரே நேரத்தில் ரேண்டம்நஸுடனும் ஒழுங்குடனும்
செயல்படும் ஒரு தளம். இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே அதில்
தொடர்ந்து ஈடுஅடுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. அதிர்ஷ்டவசமாகவோ
துருதிர்ஷ்டவசமாகவோ பங்கு சந்தையும் வெளியில் அதிகம் அறியப்படாத தளம். இரவில் வாசிக்க ஆரம்பித்தால் ஒரு ரகசிய உலகிற்கு செல்லலாம். பகலில் இந்த உலகம். இவை இரண்டும் என்னை ஆட்கொள்வதால் லெளகீக தளத்தில் எதுவுமே சலனப்படுத்துவதில்லை. எது நடந்தாலும் ‘சரி, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடக்கட்டும்’ என்கிற மனநிலைதான்.

//
உணவுக் கட்டுப்பாடு...

No comments:

Post a Comment

முதலீடு X வர்த்தகம்

நமது சாத்தியங்களும் தேவைகளுமே நமக்கான இலக்கையும் பாதைகளையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் சந்தை குறித்த நமது எதிர்பார்ப்ப்புகள் என்ன அதை...